
மாலை 6 மணிக்கு ஆரம்பித்து காலை 6 மணிக்கு முடியும் வித்தியாசமான படம். கதை, காதல், மெசேஜ் என எந்த கண்றாவியும் இல்லாத சரக்கு. ஒருவரி கதையாச்சும் வேணுமே என்ற காரணத்தால் இந்த படம் முழுக்க இழுத்துச் செல்கிற அந்த ஒரே வரி... 'ஒரு குவாட்டர் அல்லது ஒரு கட்டிங்காச்சும் அடிக்கணும் என்பது தான்'! இது தான் முழுப் படத்தின் கதை சுருக்கம்.
ஒரு ராத்திரியில் நடந்த சில விஷயங்களை ஸ்லைடுகள் போல குட்டி குட்டியாகக் காட்டும் விதமும் கோவையில் இருந்து கோயம்பேட்டுக்குள் வந்து இறங்கும் சிவா, பாலகிருஷ்ணா மீது காதலாகி அவர் படத்தை முழுக்க பார்த்துவிட்டு இறங்கும் ஓப்பனிங் சீனும் அட என்று நிமிர்ந்து உட்கார வைத்தது. ஆனால், படம் முழுக்கவே துண்டுத் துண்டாக இருப்பதுதான் மிகப் பெரிய பலவீனமாகிவிட்டது.
சவுதி அரேபியாவில் சரக்கு அடிக்க முடியாது என்பதற்காக அங்கே வேலை கிடைத்த சிவா, ஊருக்குப் போவதற்கு முன் ஒரு குவாட்டர் அடிக்க ஆசைப்படுகிறான். அவனுடய வருங்கால அக்கா புருஷனுடன் சரக்கு அடிக்கக் கிளம்ப, தேர்தல் சமயம் ஆனதால் சரக்கு இல்லாமல் இருக்க, வேறு வழியில்லாமல் சரக்குக் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் பயணப்பட ஆரம்பிக்கிறார்கள். போன இடத்தில் இவர்கள் பிரச்சினையில் மாட்டிக்கொள்ள, நடுவில் இவர்கள் வீட்டில் குடியிருக்கும் பெண் தற்கொலைக்கு முயற்சிக்க, அவளையும் காப்பாற்றிக் கொண்டு க்ளைமாக்ஸ் வரையில் அலைவதுதான் படம்.
படத்தின் நாயகன் சிவா. முதல் காட்சியிலேயே தான் சீரியஸாக எதையும் செய்யப் போவதில்லை என்பதை சொல்லிவிடுகிறார். படத்தில் பல இடங்களில் அவர் அடிக்கும் ஜோக்குகள்தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக உட்கார வைக்கிறது. அவரோடு படம் நெடுக வரும் சரணும் தன்னை எவ்வளவு கேலி செய்தாலும் தாங்கும் மனிதராக நடித்திருக்கிறார். அதேபோல, காமெடி வில்லன் ஜானும் ஓகேதான். ஆனால், இவர்களின் நடிப்பெல்லாம் எடுபடாமலே போய்விடுகிறது, மனதில் ஒட்டாத காட்சிகளால்!
பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு மூன்று முறை படையெடுத்து மக்குப் பெண்ணாகக் குட்டப்படும் வேடத்தில் வரும் லேகா வாஷிங்டன் நடிப்புப் பரவாயில்லை. முதல் பாதியில் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்லும் இவர் இரண்டாம் பாதியில் சிவா, சரணுடன் சேர்ந்து சுற்றுகிறார். ஆனால் இவரது பாத்திரமும் நம்மைக் கவரத் தவறுகிறது.
ஆங்காங்கே ஒன்லைனராக நச் நச்சென டயலாக்குகள் வந்தாலும் அதற்கான காட்சிகளில் இம்பாக்ட் இல்லாததால் வெறுப்பாகத்தான் இருக்கிறது. ஒரு குவாட்டர் அடிப்பதற்காக ஒருவன் அலைவானா? என்று யோசிப்பவர்களுக்கு இப்படத்தின் மூலம், லாஜிக், போன்ற வஸ்துக்களை தேடுபவர்கள் நிச்சயம் கடுப்பாகி கட்டிங் அடிக்கத்தான் போவார்கள். அல்லது அடித்துவிட்டு வந்தவர்களுக்கு இறங்கி போய்விடும் அபாயம் இருக்கிறது.
படம் முழுக்க ரெண்டே கால் மணி நேரம் ஒரே ஒரு இரவில் நடக்கும்படி திரைக்கதை அமைத்தது. வழக்கமாக தமிழ்ப்படங்களில் வரும் க்ளிஷே காட்சிகள் எதுவும் இல்லாமல், எந்த வித சென்ட்டிமெண்ட்டும் இல்லாமல் காமெடி என்ற ஒரே ஒரு இலக்கை நோக்கி கதை பயணிக்க வைத்தது. ஒளிப்பதிவில் ஜால வித்தை எல்லாம் செய்யாமல் நார்மலாக கதை எவ்வளவு அனுமதிக்குமோ அந்த அளவு மட்டும் லைட் ஷேடோவில் மொத்தப் படத்தையும் எடுத்தத் துணிச்சல். இந்த மூன்று விஷயங்களுக்காக இயக்குநர் தம்பதியை தாராளமாகப் பாராட்டலாம்.
ஹீரோயின் தற்கொலைக்கு முயல்வதைக்கூட காமெடியாக சொல்லி இருப்பது படத்துக்கு பிளஸ். அவருக்கு ஹீரோ உடன் காதல் ஏற்பட்டதா, இல்லையா என்பதைக் கடைசி வரை சரியாகச் சொல்லாதது ஒரு வகையில் தேவலை. டூயட் காட்சிகள் இல்லை, அப்பாடா...
படத்தைப் பார்த்து விமர்சகர்கள் படத்தில் கதை இல்லை என்று சொல்வார்கள் என இயக்குநருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அவர்களுக்கு பதிலடி கொடுப்பது மாதிரி ஒரு டயலாக் வைத்திருக்கிறார். "இதுல மெசேஜ் என்ன? ஏண்டா மெசேஜ் மெசேஜ்னு அலையறீங்க?"
உயிரைக் கொடுத்து ஒளியைக் கொடுத்திருக்கிறார் நீரவ் ஷா. காட்சிகள் எல்லாமே கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியாக இருக்கின்றன. முழுக்க இரவில் நடக்கும் கதை என்பதால் அவருடைய உழைப்பு ஏராளமாகவும் தாராளமாகவும் இருக்கிறது. ஆனால், எதற்கு இந்த உழைப்பெல்லாம் என்ற சலிப்பு ஏற்படுகிறது. ஜீ.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை படத்தின் மூடோடு ஒத்துப்போகிறது. ஆனால் பாட்டு எதுவும் மனதில் நிற்கவில்லை.
எழுதி இயக்கி இருக்கும் புஷ்கர்-காயத்ரி தம்பதியர், சினிமாவை வேறொரு பாணியில் அணுக முயற்சித்திருக்கிறார்கள். ஆசை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கான உழைப்புப் போதவில்லை. அதனால், அசத்தல் என்று சொல்வதற்கு பதில் ஸாரி என்று சொல்ல வேண்டியதாகிவிட்டது. திரும்பும் திசையெங்கும் டாஸ்மாக் இருக்கும் தமிழகத்தில் இக்கதையினை ஏற்றுக்கொள்ள சற்று சறுக்கலாகத்தான் இருக்கிறது.
வ குவாட்டர் கட்டிங் - சுரீர்னு இல்ல....!
நடிகர்கள்
சிவா, லேகா வாஷிங்டன், எஸ்.பி.பி.சரண், ஜான்
இசை
ஜீ.வி.பிரகாஷ்குமார்
இயக்கம்
புஷ்கர்
காயத்ரி
தயாரிப்பு
தயாநிதி அழகிரி, எஸ்.சசிகாந்த்
சிவா, லேகா வாஷிங்டன், எஸ்.பி.பி.சரண், ஜான்
இசை
ஜீ.வி.பிரகாஷ்குமார்
இயக்கம்
புஷ்கர்
காயத்ரி
தயாரிப்பு
தயாநிதி அழகிரி, எஸ்.சசிகாந்த்
Tamilkoodal.com
No comments:
Post a Comment