Sunday, November 21, 2010

ஓர் இரவு - Orr Iravu

Tamil Movie - Orr Iravu Review - Ajay, Anandh, Chandrasekar, G. Sathish, Asha, Avanthika, Indhira, Hari Shankar, Harish Narayan, Krishna Sekar, K. Venkatprabhu Shankar, Hari Shankar,  Tamil Movie Actor, Actress
நடிகர்கள் 
சதீஷ்.ஜி, அவந்திகா, ஆஷா, இந்திரா, அஜய், ஆனந்த், சந்திரசேகர்
இசை
கே.வெங்கட்பிரபு சங்கர்
இயக்கம்
ஹரிசங்கர், ஹரீஷ் நாராயண், கிருஷ்ண சேகர்.
தயாரிப்பு
ஹரிசங்கர்

ஆவிகள் உண்டா? என்ற கேள்விக்கு விடையளிக்கும் படம்

டி.வி நிகழ்ச்சியாக தொடங்குகிறது படம். அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் நகுலன் (சதீஷ்.ஜி) ஆவிகள் நடமாடுவதாக கூறப்படும் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பதை வீடியோ மூலம் பார்க்கலாம் என காட்சிகள் ஆரம்பமாகிறது. "நான்தான் இறந்துபோன நகுலன் பேசுகிறேன். நான் எப்படி இறந்தேன் என்பதை நானே சொல்கிறேன்" என்றபடி திகிலுடன் அடுத்தடுத்து காட்சிகளும் சுழல்கிறது.
 
மூணார் அழகான மலைப்பிரதேசம். இயற்கையின் நன்கொடை. மஞ்சு கவிகிற அத்துவானக் காட்டில் உள்ள ஒரு வீட்டில் ஆவி ஆராய்ச்சி நடத்துவதற்காக சென்றவர்கள் செத்துப்போகிறார்கள். மலைப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ஆவிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த வீட்டுக்கு செல்லும் பலர் மர்மமாக சாகிறார்கள். அங்கு ஆவிகள் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து சொல்லும்படி ஆவி ஆராய்ச்சியாளர் சதீஷ்.ஜியை அவ்வீட்டின் உரிமையாளர் அனுப்பி வைக்கிறார்.
முதல் கட்ட ஆராய்ச்சியை முடிக்கும்போது ஆவி இருப்பதற்கான அடையாளம் எதுவுமில்லை. அடுத்த கட்ட ஆராய்ச்சியில், யாரோ கத்துவதுபோல், பளிச்சென ஒளி தெரிவதுபோல் பல அனுபவங்களை உணர்கிறார். வீட்டின் சொந்தக்காரருக்கு போன் செய்து, "ஏற்கெனவே இந்த வீட்டிற்கு யாரும் வந்திருக்கிறார்களா? என்று சதீஷ் கேட்க, 3 பேர் போனார்கள். 2 பேர் செத்துவிட்டார்கள். ஒருவர் மாயமாகிவிட்டார்" என்று பதில் வருகிறது. அதிர்ச்சி அடையும் சதீஷ், ஆராய்ச்சியை தீவிரப்படுத்துகிறார். பிறகு என்ன என்பது விறுவிறுக்க வைக்கும் இறுதிக்காட்சி.
கதாநாயகன்-கதாநாயகி இல்லாத இந்தப் படத்தில் துணை கதாபாத்திரங்களில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள். டிஜிட்டலில் படமெடுக்கிறோம் என்று வழக்கமான மதுரை, அரிவாள், பாட்டு, காமெடி என்று போகாமல் டிஜிட்டல் சினிமாவுக்கான சரியான கதை களத்தை கையிலெடுத்துக் கொண்டு, ஜெயித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பாயிண்ட் ஆப் வியூ என்று முடிவெடுத்தவுடன் அதற்கேற்றார் போன்ற ஷாட் டிவிஷன்கள், கேரக்டர் பேசும் வசனங்கள், நடவடிக்கைகள் எல்லாமே மிக இயல்பு. அதே போல அந்த கேரக்டருக்கு வரும் பதட்டம், பயம் எல்லாமே அவ்வளவு இயல்பாய் ஒட்டிக் கொள்கிறது நமக்கு.
"பாரா நார்மல்" பற்றிய சிந்தனையை நகுலன் என்கிற கதாபாத்திரம் மூலம் சொல்லியவர்கள் இசைக்கருவிகள் மூலம் ஆவிகளைப் பற்றிய பயத்தை மேலும் அதிகமாக்கி விட்டார்கள்.
மூணாறு போகும் வழியில் லிப்ட் கேட்கும் வில்லிவாக்கம் ரவியின் பேச்சினிடையே உலவும் காமெடியும், பின் அதே கேரக்டரை வைத்து உறையும் இடமும் சூப்பர். "இந்த மாதிரி இடத்தில நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ஏன்னா சில சமயம் நம்ம நிழலே நம்மை பயமுறுத்தும்" என்று சதீஷ்.ஜி பேசும் வசனங்கள் மிக ஷார்ப். இறுதிக்காட்சியை நோக்கி போகும் நேரத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்பவர்களுக்கு இருக்கிறது..... நிச்சயம் இருக்கிறது. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாய் படவில்லை. அதையெல்லாம் மீறி படம் பிரமிப்பாக இருப்பதை மறுக்க முடியாது. இந்தப் படத்தின் நாயகன், நாயகி, வில்லன் எல்லாம் கேமராதான். கேமராவின் பார்வையிலேயே கதையைச் சொல்வது புதிய பாணி. எளிதும் அல்ல! உழைத்தவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
மனிதர்களுக்கும் அமானுஷ்யங்களுக்கும் இடையே ஒரு கோடு இருக்கிறது. அந்த கோட்டை தாண்டாதவரை பிரச்சினை எதுவும் இருக்காது என்று கருத்து சொல்லி முடிக்கின்றனர்

No comments:

Post a Comment