Wednesday, November 10, 2010

மைனா - Mynaa

நடிகர்கள் 
வித்தார்த், அமலா பால், தம்பி ராமையா, சேது, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி
இசை 
டி.இமான்
இயக்கம் 
பிரபு சாலமன்
தயாரிப்பு 
ஜான் மேக்ஸ்


Tamil Movie - Mynaa Review - Sethu, Thambi Ramiah, Vidharth, Amala Paul, Vairabalan, Sukumar, Prabhu Solomon, Kannadhasan, Yugabarathi, D. Imann, John Max, Prabhu Solomon, Anal Arasu,  Tamil Movie Actor, Actress


தலை தீபாவளி கொண்டாட வேண்டிய ஒரு போலீஸ் அதிகாரி தீபாவளிக்கு முந்தின நாளும், தீபாவளி அன்றும் சந்திக்கும் பிரச்சினைகள் தான் கதை.
தேனி மாவட்டம் குரங்கினி என்ற மலைக்கிராமம் தான் கதைக்களம். பெரியகுளம் கிளைச்சிறையில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. சிறுவயதிலேயே நாயகன்(சுருளி) நாயகியோட அம்மாவுக்கும், நாயகி(மைனா)க்கும் தனக்கு தெரிந்த பாட்டியின் மூலம் அடைக்கலம் கொடுக்கிறான். மைனாவின் மேல், சிறு வயது முதல் ஏற்பட்ட அன்பு வளர்ந்துகொண்டே வந்து அவள் பூப்பெய்தும்போது காதலாக முழுமையடைகிறது. அவள்மேல் உயிரையே வைக்கிறான். அவள் தனக்குத்தான் என்று நம்புகிறான். சூழ்நிலையில் நாயகியின் அம்மா காதலை எதிர்க்க, நாயகன் அடிக்க வர போலீஸ் அவரை கொலைமுயற்சி என கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்கிறது. விடுதலையாக 2 நாட்களே உள்ள நிலையில் நாயகிக்கு அவரது தாய் வேறு திருமண ஏற்பாடு செய்ய நாயகன் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்து நாயகியை மீட்டெடுக்கிறார். அதே சமயம் நெருக்கடியான சூழலில் இருக்கும் போலீசார் மீண்டும் நாயகனை கைது செய்து, சிறைக்கு கூப்பிட்டு வர வழியில் ஏற்படும் சம்பவங்களே மீதி கதை.
சுருளியாக வித்தார்த், தொட்டுப்பார் படத்தில் ஏற்கனவே அறிமுகமானவர். சுருளியாக ஊரில் சண்டித்தனம் செய்து கொண்டு, மைனாவிற்காகவே வாழும் ஒரு டிபிகல் தமிழ் சினிமா ஹீரோ. பரட்டைத்தலை, தாடி, ஊதாரித்தனம், அப்பனை மரியாதை இல்லாம பேசுறது இன்ன பிற இலக்கணங்களைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார். நடிப்பென்று பார்த்தால் சில காட்சிகளில் ஓ.கே. ஆனால் அதற்காக பருத்தி வீரனை நகல் எடுத்திருப்பது ஹ்ம்ம்....என்னத்த சொல்ல!!!
மைனாவாக அமலா பால்! சிறு ஒப்பனைக் கூட இல்லாமல் கிராமத்து அழகியாக வலம் வருகிறார். பாதி வசனங்களை இவர் கண்களே பேசி விடுகின்றது. இவர் அழகாகத் தெரிவதற்கு அந்த பாத்திரப் படைப்பும் ஒரு காரணம். முதல் படத்தை ஒப்பிடும் போது நடிக்க நிறைய வாய்ப்பு, சரியாக பயன்படுத்தி உள்ளார். பார்க்கலாம், இனி வரும் படங்களை எப்படி என்று.
படத்தில் வரும் அனைத்து நடிகர்-நடிகைகளும் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டராக வரும் சேது, தலை தீபாவளிக்குப் போக முடியாத வெறுப்பை உமிழும் போது ஏ-கிளாஸ்! பின்னொரு சமயத்தில் தன் உயிரைக் காப்பாற்றும் சுருளியை நன்றி ததும்ப ஒரு பார்வை பார்ப்பாரே! சூப்பருங்க! அந்த முதல் காட்சியிலேயே இன்ஸ்பெக்டரின் மனைவி கேரக்டர் தெள்ளத் தெளிவாக நமக்குப் புரிகிறது. வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும்னு சொல்பவரிடம் 'வருவீங்களா மாட்டீங்களா'னு திரும்பத் திரும்ப கோபத்தில் கேட்கும்போது அரங்கத்தில் கைத்தட்டல்! பல பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க!
நாயகியின் அம்மா, நாயகனின் அப்பாவாக நம்ம செவ்வாளை, சில ஒன் லைனர்களால் சிரிப்பு மூட்டும் அந்த சிறுவன், பள்ளி வாத்தியார், இன்ஸ்பெக்டர் மனைவியின் அண்ணன்மார்கள், அண்ணிகள், அந்த பஸ் பயணத்தில் உடன் பயணிப்பவர்கள், மூணாறு சுப்பிரமணி என அனைத்து பாத்திரங்களும் நம் மனதில் நிற்பது இயக்குநரின் வெற்றி.
சுருளி- மைனா இருவருக்கும் ஏற்படும் காதல் படு தீவிரமாக காண்பிக்கப்படுவது தேவையான ஒன்றுதான். மைனா வீட்டில் கரண்ட் கட், விடிந்தால் பரீட்சை. அவள் படிப்பதற்காக சுருளி சைக்கிள் ஓட்டி அந்த டைனமோ கனெக்ஷனில் பல்பை எரிய வைத்துப் படிக்க வைப்பதும், பின் அதுவும் ஒர்க் அவுட் ஆகாததில் சுருளி மின் மினிப் பூச்சிகளை ஒரு பாட்டில் தண் ணீரில் பிடித்து அந்த வெளிச்சத்தில் படிக்க வைப்பதும் மனதைக் கவரும் காட்சிகள். அதற்கு நன்றிக்கடனாக மைனா உதட்டுடன் உதடு பதிப்பதில் காதலின் உச்சம், கிளாமரின் சொச்சம்.
பஸ் ஆக்சிடெண்ட்டில் 2 போலீஸ் அதிகாரியையும் சுருளி காப்பாற்றிய பிறகு அவர்கள் இடையே ஏற்படும் நல்லுறவை இன்னும் விஸ்தாரமாய் காண்பித்திருக்கலாம். க்ளைமாக்சில் கடைசி 30 நிமிடங்கள் பதைபதைப்பு. எதிர்பார்க்க முடியாத திருப்பம். காதலர்கள் சேருவார்களா, சேர மாட்டார்களா என சஸ்பென்ஸ் மெயிண்ட்டன் பண்ணுவதில் இயக்குநர் ரொம்பத் தெளிவாக இருக்கிறார்.
பயமுறுத்தும் குன்றுகள், இருள், காட்டுக்குள் யானை துரத்துவது என அனைத்துக் காட்சிகளும் 'தேனியின்' இயல்பு மாறாமல் படமாக்கப்பட்டுள்ளன. மேகக்கூட்டங்கள் நிறைந்த குன்றுகளைக் கொண்ட தேனியிலேயே நாம் இருந்து அந்த கதாபாத்திரங்களுடன் வாழ்வது போன்ற உணர்வு தோன்றுகிறது. இந்த நவீன யுகத்திலும் சில பழமை வாதங்களின் உண்மையை உணர முடிகிறது. குடும்பப்பகையுடன், கனத்த இதயத்தைக் கொண்ட இயல்பான கிராமத்துப் பெண்ணாக வலம் வரும் 'மைனாவின்' அம்மாவை அதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம்.
இரண்டு பாடல்கள் இதயத்தில் இடம் பிடிக்கின்றன. உயரமான மலைகள், செங்குத்தான பாறைகள், குறுகிய ஓடைகள், நீர்நிலைகள், பசுமையான பிரதேசங்கள் அவற்றை ஊடுருவி செல்லும் சாலைகள் என அனைத்தையும் ஒளிப்பதிவாளர் சுகுமார் அழகுறப் படமாக்கியிருக்கிறார். குறிப்பாக 'மைனா மைனா நெஞ்சுக்குள்ளே' பாட்டு நல்ல மெலோடி. அந்தப்பாட்டின் சரணத்தில் தொட்டாற்சுருங்கி இலைகள் அமலா பாலின் இமைகள் பட்டு சுருங்குவது போல் காண்பித்து பின் மலர்வது போல் காண்பித்தது அழகியல் ரசனை. அந்தப்பாட்டில் அமலா பாலின் கன்ன பருக்களைக்கூட அழகாகக் காண்பித்து தன் முத்திரையை அழுத்தமாகப் பதிக்கிறார் சுகுமார். ஒளிப்பதிவாளரைப் போல கலை இயக்குநர் வைரபாலனும் நம் மனதில் இடம்பிடித்து விடுகிறார்.
பத்து பெரிய நட்சத்திரங்களை வைத்து கதை சொல்ல முடியாமல் சிலர் தவித்து வரும் நேரத்தில், நான்கே கதாபாத்திரங்களை வைத்து அழகுற கதை சொல்லியிருக்கிறது 'மைனா'. இது இடருக்குட்பட்டது என்றாலும் கூட, இயக்குநர் பிரபு சாலமன் துணிந்து இறங்கியிருக்கிறார்.
பிரபு சாலமனின் படங்கள் எல்லாமே நமக்கு ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவை. ஆனால் படம் முடிந்து வரும் போது 'இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாமோ'னு ஒரு எண்ணம் நமக்கு வரும். இந்தப் படம் அந்த எண்ணத்தை முற்றிலுமாய் நீக்கவில்லை என்றாலும், நிச்சயமாக அவரின் உழைப்பைப் பாராட்ட வேண்டும். இந்தப் படத்தை எந்தத் தளத்தில் கொண்டு செல்வது என்ற சிறு தயக்கம் இயக்குநரிடம் இருந்தது போல் தெரிகிறது. ஒரு முழு காதல் கதையா, த்ரில்லரா, அல்லது ஒரு அட்வென்சர் படமா என்றில்லாமல் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தொட்டுச் சென்றுள்ளது படம்.
மைனா - காதல் பயணம்

No comments:

Post a Comment