Wednesday, November 10, 2010

உத்தமபுத்திரன் - Uthama Puthiran

நடிகர்கள் 
தனுஷ், ஜெனிலியா, விவேக், பாக்யராஜ், கருணாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மயில்சாமி, அம்பிகா, ரேகா, அஸ்வினி, ஆர்த்தி, உமா பத்மநாபன்
இசை 
விஜய் ஆண்டனி
இயக்கம் 
மித்ரன் ஆர்.ஜவஹர்
தயாரிப்பு 
என்.வி.மோகன் அப்பாராவ், ஜி.ரமேஷ் தாண்ட்ரா


Tamil Movie - Uthama Puthiran Review - Ashish Vidyarthi, Bhagyaraj, Dhanush, Karunas, Mayilsamy, R. Sundar Rajan, Rajendran, Vivek, Aarthi, Ambika, Genelia, Rekha, Uma Padmanabhan, Uma Rani, M. Prabhakaran, Balasubramaniam, Mithran R. Javahar, Mithran R. Javahar, Thyagu, Vijay Antony, Mohan Appa Rao, Ramesh Dhantra, Mithran R. Javahar, Gopi Mohan,  Tamil Movie Actor, Actress 
பெரும் நட்சத்திர பட்டாளம் புடைசூழ காதல், சென்டிமெண்ட் கலந்த குடும்பக்கதை.
நண்பர்களின் காதலுக்கு மரியாதை செய்து அவர்களுக்கு உதவும் தனுஷ், ஒரு முறை நண்பனுக்காக மணக்கோலத்தில் இருக்கும் ஜெனிலியாவை கடத்திவிடுகிறார். தவறை உணர்ந்து வருந்தும்போது, 
"நானே அந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன், ரொம்ப தேங்ஸ்" என்கிறார் ஜெனிலியா.
ஆனால் அவள் குடும்பம் சும்மா விடுமா? அதுவும் ஜெனிலியாவின் சொத்துக்காகவே இந்த கல்யாணம் என்னும்போது விடுவார்களா? துரத்துகிறார்கள். அவர்களிடமிருந்து ஜெனிலியாவை, தனுஷ் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது கதையின் தொடக்கம் மட்டும்தான். 
தனுஷுக்கும், ஜெனிலியாவுக்குமிடையே காதல் மலர்வது, ஜெனிலியாவைத் தன் வீட்டினர் ஒப்புக்கொள்ள தனுஷ் அரங்கேற்றும் நாடகம், அந்த நாடகம் அம்பலமாகும் சமயத்தில் குறுக்கிடும் வில்லன்களின் மிரட்டல், அந்த மிரட்டலைச் சமாளிக்க விவேக்கை பகடைக் காயாக்கி தனுஷ் ஆடும் நாடகம் என்று போகிறது திரைக்கதை. வில்லக் குடும்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மாற, கடைசியில் கொஞ்சம் சண்டை, நிறைய நெகிழ்ச்சி என்று சுபம் போடுகிறார்கள்.
தனுஷ் பெரும்பாலும் காலையில் எழுந்த சோர்வுடனே காணப்படுகிறார். அவரது முகம் எப்போதும் களைப்படைந்ததாகவே காட்சியளிக்கிறது. எப்போதும் சுறுசுறுப்பாகவே காணப்படும் தனுஷ் இப்படத்தின் முதல் பாதி முழுவதும் சோர்வாகவே காணப்படுகிறார். இருப்பினும் பிற்பாதியில் விவேக்குடன் இணையும் போது பழைய தனுஷை காணமுடிகிறது. ஆனாலும் வயிறு குலுங்க சிரிப்பதற்கு வாய்ப்பில்லை.
திட்டமிட்டோ அல்லது தெரியாமலோ தனது முந்தைய படங்களின் சாயலை இப்படத்தில் ஜெனிலியா தவிர்த்திருக்கிறார். ஜெனிலியா எடை கூடியிருப்பதை அவரது கன்னங்கள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. முதல் சில காட்சிகளில் கேமராக்கள் தங்கள் எல்லையை மீறி ஜெனிலியாவை படம் பிடித்திருக்கின்றன. ஜெனிலியாவின் ஒப்பனையும் முகம் சுளிக்க வைக்கிறது.
இந்தப் படத்தின் துவக்கத்திலேயே விவேக் இல்லாவிட்டால் படம் போணியாகாது என்பது தனுஷிற்கு நன்கு தெரிந்திருக்கும் போலும். அதனால்தான் விவேக்கை விரட்டி, விரட்டிப் பிடித்திருக்கிறார் தனுஷ். 'நெஞ்சம் மறப்பதில்லை' டியூன் மனதில் விழுந்த பிறகு எப்போதும் செத்த பொணம் போல் நிற்கும் விவேக்கின் நடிப்பு அக்மார்க் நகைச்சுவை. 
சமீப காலங்களில் விவேக்கின் சிறந்த காமெடி என்று இந்தப் படத்தைச் சொல்லலாம். தனி டிராக்காக வராமல், துணுக்குகளை நம்பாமல் திரைக்கதையோடு சேர்ந்து பயணிப்பதுதான் இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லலாம். நகைச்சுவையை வசனத்தில் மட்டுமல்ல ஆக்ஷனிலும் காட்டலாம் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் விவேக்.
அம்பிகா, ரேகா, அஸ்வினி, நித்யா, உமா பத்மநாபன், என்று பெரிய லிஸ்ட் இளம் அம்மாக்கள் வரிசை கட்டி கலர் காண்பிக்க.. நல்லாத்தான் இருக்கு. அது யாருப்பா அந்தச் சின்னக் கவுண்டரோட அம்மா..? உண்மையா இந்தப் படத்துல இவருடைய சவுண்டுதான் அதிகம். செம சவுண்டு. ஆளும் அழகுதான். யாருன்னு தெரியலையே..? தெரிஞ்சா சொல்லுங்கப்பா..!
பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், சுரேஷ்பாபு, ஆஷிஷ் வித்யார்த்தி, அந்த குண்டு தெலுங்கு வில்லன் என்று ஆண்கள் சைடும் ஈக்குவலாகத்தான் உள்ளது..!
படத்தின் தயாரிப்பாளர் பெரிய கை என்பதாலும், நடிப்பது தனுஷ் என்பதாலும், ஒரு நாள் கால்ஷீட்டுக்கே பெட்டி நிறைய பணம் கிடைத்ததாலும் ஸ்ரேயா படத்தின் துவக்கத்திலேயே வந்து போகிறார்..!
ஆனால் தனுஷின் கூட்டணி ஆட்கள்தான் சரியில்லை.. தன்னைப் போலவே ஒரு நடிகையாக கிரகிக்க முடியாத நிலையில் இருப்பவர் ஆர்த்தி என்பதால் மறைமுகமாக ஆர்த்திக்கு தனுஷ் நிறைய ஆதரவுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்..! ஆனாலும் அதற்காக குண்டுமணி என்று இவரே பெயர் வைத்துக் கூப்பிடுவது பொருத்தமாக இல்லை.
கருணாஸை அந்தக் கேரக்டரில் காண்பிப்பது ஏன் என்று தெரியவில்லை. இது போன்ற பணக்கார வீடுகளில் வேலை செய்யும் அரவாணிகள் என்றால், தேனி மாவட்ட ஊரான கம்பத்தில்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். சரி.. பரவாயில்லை என்று விட்டுவிட்டாலும் கருணாஸை ஜொள்ளுவிட வைத்து ஏமாற்றம் காட்டுவது ரசிக்கும்படி இல்லை.
ஒட்டு மொத்த படத்தின் ஒரே ஆறுதல் பாக்யராஜின் கதாபாத்திரம் மட்டுமே!
ஜெனிலியாவின் மாமன்கள் சக்கையாக ஏமாற்றப்பட்டாலும் கடைசியில் 'இட்ஸ் ஆல்ரைட்' ரேஞ்சுக்கு அமைதி காப்பதெல்லாம் ரொம்ப ஓவர். மேலும் பல காட்சிகளும் திருப்பங்களும் யூகிக்கக்கூடியதாகவே இருப்பது பலவீனம். பல காட்சிகள் தில்வாலே, ஹம் ஆப்கே போன்ற படங்களை நினைவுபடுத்துகின்றன.
தனுஷிடமிருந்து ஜெனிலியா பிரிவது உணர்வுப்பூர்வமான காட்சி. தனது மாமனுக்கும் அவரது அடியாட்களுக்கும் பயந்து, தன்னை கடந்து போகும் தனுஷை கூப்பிட முடியாமல் ஜெனிலியா தவிக்கிறார். அத்துடன் படத்தின் இடைவேளையும் வந்துவிட, அடுத்தது என்ன? என ரசிகர்களின் இதயம் தவிக்கிறது. ஆனால் அதற்கு அடுத்த காட்சியே முந்தைய காட்சியின் அழுத்தத்தை ஒன்றுமில்லாமல் செய்து, நம்மை 'உச்' கொட்ட வைக்கிறது.
தனுஷை அழித்துவிடுவதாக மிரட்டும் 'நான் கடவுள்' ராஜேந்திரனின் எவ்விதத் தடையுமின்றி படம் முடிவை நோக்கி பயணிக்கிறது. தமிழ் படங்களுக்கே உரித்தான தோணியில் பல கதாபாத்திரங்கள் உடனுக்குடன் மாறி உணர்ச்சிப்பூர்வமான வசனங்களையும் பேசி விடுகின்றனர். இது நாடகம் பார்த்த உணர்வையே நமக்குத் தருகிறது.
பாலசுப்பிரமணியனின் ஒளிப்பதிவு குளுமை. பயணக் காட்சிகளை, குறிப்பாக நிலவொளியில் பாடும் காட்சியில், கேமிரா கவிதை எழுதுகிறது. விஜய் ஆண்டனி ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான். வில்லன் பிரவேசிக்கும்போது டிரம்ஸ்களின் அலறல் காதைக் கிழிக்கிறது.
பல குறைகளுக்கு நடுவே, நிறைகளைக் காண்பது அரிது. சில நேரங்களில் அது முடியாததும் கூட! பெரிய பொருட்செலவில் படம் எடுக்கிறார்கள் என்பதற்காகவோ, பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்பதற்காகவோ படம் ஓடிவிடாது. அந்த வகையில் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இன்னும் பக்குவப்படணும்.
லாஜிக்கையெல்லாம் எதிர்பார்க்காமல் சும்மா ஜாலியா குடும்பத்தோட போகணும்னு நினைக்கிறவங்க தாராளமா போயிட்டு வரலாம்!
உத்தமபுத்திரன் - மினி காமெடி சீரியல்!

No comments:

Post a Comment