Thursday, November 25, 2010

நகரம் மறுபக்கம் - Nagaram Marupakkam

நடிகர்கள்
சுந்தர்.சி., அனுயா, வடிவேலு, ஜி.சீனிவாசன், போஸ் வெங்கட்
இசை
தமன்
இயக்கம்
சுந்தர்.சி
தயாரிப்பு
குஷ்பு சுந்தர்




ஒருவன் ரவுடியாக மாறுவதற்கு அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே காரணம் என்பதைச் சொல்லும் கதை.

காக்க காக்க சூர்யா போல கதையை ஆரம்பிக்கிறார் சுந்தர்.சி,. அவரே அவர் கதையை சொல்லச் சொல்ல காட்சிகள் பின்னோக்கிப் போகிறது. காப்பியடிக்கப்பட்டாலும் இந்த யுக்தி, எந்த விதத்திலும் படத்தை முன்னோக்கி செலுத்த உதவவில்லை. அதனால் என்ன? வடிவேலு இருக்கார். பிழைச்சோம்!

சின்னச் சின்னத் திருட்டுக்களை செய்து வந்த லோக்கல் ரவுடியான சுந்தர், போதைப் பொருள் விற்பனை செய்து வந்த தாதாவுக்காக ஒரு கொலைப் பழியை தான் ஏற்றுக் கொண்டு 5 ஆண்டு சிறைத் தண்டனைப் பெற்று அப்போதுதான் விடுதலையாகி வெளியில் வருகிறார். சிறை மீண்ட சிற்பியை அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரான உயிர் நண்பன் வரவேற்று சுந்தருக்கு வேறு ஒரு கவுரவமான வேலை வாங்கித் தருவதாகக் கூறி மீண்டும் கடத்தல் தொழிலிலேயே ஈடுபடுத்தி விடுகிறார்.

இடையில் தான் சந்திக்கும் பெண்ணை தமிழ் சினிமாவின் இலக்கணப்படி காதலிக்கத் துவங்குகிறார் சுந்தர். அந்தப் பெண் சினிமாவில் நடனமாடும் பெண். அந்தப் பெண்ணின் அம்மா ஒரு கோடீஸ்வரனுக்கு வைப்பாட்டியாக இருந்து வருகிறார். அந்த அம்மாவுக்கு இதயத்தில் ஓட்டை. அதற்கு ஆபரேஷன் செய்ய பணம் வேண்டும். அம்மா தன்னைக் கீப்பாக வைத்திருப்பவனிடம் பணம் கேட்க மறுத்து, நோயினால் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து கொண்டிருக்கிறாள்.

இன்ஸ்பெக்டர் ஹோட்டல் ஒன்றில் பெண்ணுடன் ரூம் போட்டு குஜாலாக இருக்கப் போன இடத்தில் தேடி வந்த வம்பினால் வெட்டு, குத்தாகிறது. அதுவரையில் பிரச்சினையில் சிக்க மாட்டேன் என்று காதலிக்கு வாக்குக் கொடுத்த சுந்தரால் அதை மீற வேண்டிய கட்டாயம். இந்த அக்கப்போரில் ஒரு டாடா சுமோவை எடுத்துக் கொண்டு சுந்தரும், இன்ஸ்பெக்டரும் தப்பிக்கும்போது ஏரியா கமாண்டரான பாயின் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்து இன்ஸ்பெக்டரிடம் சிக்குகிறது. இதை துப்பறிந்த பாய் இன்ஸ்பெக்டரையும், சுந்தரையும் தேடுகிறார்.

அதற்குள்ளாக காதலியின் அம்மாவுக்கு சீரியஸாக கதாநாயகி தனது வளர்ப்புத் தந்தையிடம் பணம் கேட்கிறாள். அந்தக் கட்டைல போறவன் என்ன சொல்றான்னா, "நான் உனக்கு தந்தையும் இல்லை. காட்பாதருமில்லை. என்னிக்குமே மாமாதான். என்னைக் கல்யாணம் செஞ்சுக்க.. உன் அம்மா ஆபரேஷனுக்கு பணம் தருகிறேன்.." என்கிறான்.

ஏற்கெனவே சுந்தருடன் கோபத்தில் இருந்த நாயகி இதற்கு ஒத்துக் கொள்ளும்போது, வடிவேலு துணையுடன் இதனை டைவர்ட் செய்து ஆபரேஷனை மட்டும் செய்ய வைத்து விடுகிறார் சுந்தர். சுந்தரும், நாயகியும் அவசரம், அவசரமாக கல்யாணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யும்போது, கல்யாணத்தன்று இன்ஸ்பெக்டர் சுந்தரிடம் "பாண்டிச்சேரிக்குப் போய் பாயை பார்க்க வேண்டும். உடனே வா.." என்றழைக்கிறான். காதலியோ "நான் முக்கியமா? அவன் முக்கியமா?" என்கிறாள். சுந்தர் "தனக்கு நண்பன்தான் முக்கியம்.." என்று சொல்லிவிட்டு பாண்டிச்சேரிக்குக்குச் செல்கிறார்.

அங்கே சுந்தரே எதிர்பார்க்காத தருணத்தில் பாயை போட்டுத் தள்ளுகிறார் இன்ஸ்பெக்டர். இதனால் நிச்சயம் வில்லங்கம் வரும் என்று நினைத்து சுந்தர், காக்கி நண்பனிடமிருந்து விலகியோட முயல்கிறார். விதி மறுக்கிறது. இன்ஸ்பெக்டரை காரோடு லாரியில் ஏற்றிக் கொள்ளப் பார்க்கிறார்கள். தப்பித்து மருத்துவனையில் ஒளிந்துக் கொள்கிறான் இன்ஸ்பெக்டர். தேடி வந்து தீர்த்துக் கட்டுகிறான் பாயின் மகன்.

அடுத்தது சுந்தர்தான் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு எதிரிகள் முன்னேற.. நாயகியோடு ஐதராபாத்தில் போய் செட்டிலாக நினைத்து சுந்தர் தப்பிக்க நினைக்க.. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான் கடைசியில் நடக்கிறது..

நகரத்தில் நடக்கிற கதை என்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்குமா என்கிற அளவுக்கு இருக்கிறது ஒவ்வொரு காட்சிகளும். சுந்தர்.சி, ஆள் வளர்ந்த அளவுக்கு நடிப்பை வளர்த்துக் கொள்ளவில்லை. நிற்கிறார். நடக்கிறார். ஓடுகிறார். மூச்சிரைக்கிறார். ஆனால் முகத்தில் ஒரு மி.மீட்டர் எக்ஸ்பிரஷன் கூட இல்லை. ஆனால் ஒரு காட்சி பரபரப்பாக இருக்கிறது. தன்னை சுற்றியிருப்பவர்கள் தன்னிடம் நட்பாக பேசிக் கொண்டே தன்னை போட்டுத் தள்ள முயல்கிறார்கள் என்பது தெரிந்து அவர் காட்டும் சுறுசுறுப்பு.

இவருக்கு ஜோடி அனுயா. திமிறி நிற்கிற குதிரை. ஆனால் குளோஸ் அப்தான் கொடுமை. அப்பா ஸ்தானத்தில் இருக்கிற மனுஷன், தன்னையே அடைய நினைக்கிற போது அவர் அடைகிற அதிர்ச்சியையும் அருவருப்பையும் அப்பட்டமாக முகத்தில் கொண்டு வந்திருக்கிறார். திருந்திவிட்டதாக சொன்ன சுந்தர்.சி மீண்டும் பைட் பண்ணும்போது அனுயா அடைகிற துக்கமும் ரசிகர்களை என்னவோ செய்கிறது.

'புதிய வார்ப்புகள்' படத்தில் பார்த்தது. அதன்பின் பல வருடங்கள் கழித்து வில்லத்தனம் பண்ணியிருக்கிறார் ஜி.சீனிவாசன். வயசானாலும் அந்த முறைப்பு போகவில்லை. இரண்டாவது நாயகன் போலவே படம் முழுக்க வருகிறார் போஸ் வெங்கட். நடிப்பும் அட்டகாசம்.

இடையில் சுந்தருடன் மனஸ்தாபப்பட்டு பிரிந்து சென்ற வடிவேலுவின் வீட்டிற்கே நேரில் சென்று சமாதானம் செய்த குஷ்புவின் சாமர்த்தியத்தைக் கண்டிப்பாக பாராட்டித்தான் ஆக வேண்டும். படத்தில் 'தலைநகரம்' மாதிரியே அதகளம் செய்திருக்கிறார் 'ஸ்டைல் பாண்டி'யாக வரும் வடிவேலு.

இனி நகைச்சுவைக் காட்சிகளில் இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும் நிச்சயம் இடம்பெறும். மனிதர் படத்திற்கு படம் மெருகேற்றிக் கொண்டே செல்கிறார்.. நூறாவது தடவையாக கொள்ளையடிக்கச் செல்லுமிடத்தில் வடிவேலுக்கு கிடைக்கும் மரியாதை.. வயிற்று வலியே வந்துவிட்டது.. இது மாதிரியான ஐடியாவெல்லாம் எங்கேயிருந்துதான் கிடைக்கிறதோ தெரியவில்லை. தமிழ் சினிமாவில் கதைகளுக்குத்தான் பஞ்சமே தவிர.. நகைச்சுவைக் காட்சிகளுக்கு மட்டும் பஞ்சமேயில்லை.

படத்தில் சில இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங் என்றாலும், ரசிக்க அது தடையாக இல்லை. அதேபோல படத்தின் நீளத்தை சற்றுக்குறைத்திருக்கலாம். இன்னும் எத்தனை காலம்தான் வில்லனோ, வில்லனின் ஆட்களோ, டாக்டர் உடையில், ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து கொலை செய்துவிட்டு தப்பி விடுவார்களோ?!

தமன் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம் ரகம். இளம் இசையமைப்பாளர் என்றாலும், பின்னணி இசையைக் கையாள்வதில் நல்ல முதிர்ச்சி. துறைமுகத்துக்குள் இயங்கும் மாபியா உலகை படம் பிடித்துக் காட்டியதில் இயக்குநர்  சுந்தருக்கு நிகரான பங்களிப்பு புலித்தேவன் காமிராவுக்கு. ஒரிஜினலாகக் காட்ட மெனக்கெட்டிருக்கிறார்.

நகரம் மறுபக்கம் - சிரிக்க மட்டும்

No comments:

Post a Comment