மிஷ்கின், ஸ்னிக்தா, அஸ்வத் ராம், ரோஹினி, நாசர்
இசை
இளையராஜா
இயக்கம்
மிஷ்கின்
தயாரிப்பு
சி.அருண்பாண்டியன், கே.கருணாமூர்த்தி

தன் தாயைத் தேடி மனநோயாளி ஒருவனும், எட்டு வயது சிறுவனும் செல்வதுதான் கதை.
பெரிய நட்சத்திரப் பட்டாளம், நாலு பைட், 2-3 கோடிக்கு பாடலுக்கு செட், பஞ்ச் டயலாக் என்பது தமிழ் சினிமாவில் ஹிட் பார்முலா. மறுபக்கம் இயல்பான கதைகள் கமர்சியலுக்குதவாது என்று அவார்டுகளை குறிவைத்து ஆர்ட் பிலிம்களை இயக்குவதுதான் வழக்கம். யதார்த்தக் கதைகள், இயல்பான சம்பவங்கள், நேட்டிவிட்டியாகப் படமெடுத்து அதை கமர்சியலாகவும் வெற்றி பெறச் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டிய இளைய தலைமுறை இயக்குநர்களில் மிஷ்கின் முக்கியமானவர். மிஷ்கினின் 'நந்தலாலா'வும் இந்த வகையை சார்ந்ததே.
அன்னவாசல் என்னும் ஊரில் இருந்துக் கொண்டு மாதந்தோறும் லெட்டரையும், பணத்தையும் அனுப்பி வைக்கும் தனது அம்மாவைத் தேடிப் புறப்படுகிறான் சிறுவன் அஸ்வத். சிறிதளவு மனநலம் பாதித்த நிலையில் மருத்துவமனையில் சிக்கியிருக்கும் ஒரு நோயாளி மிஷ்கின். எல்லாரையும் பார்க்கவும், நேசிக்கவும், சோறு ஊட்டவும் அம்மாவும், அப்பாவும் வரும்போது, தன்னைப் பார்க்க யாரும் வரவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத கேரக்டர்.. ஒரு நாள் மருத்துவமனையைவிட்டு வெளியேறுகிறான்.
அதே நாள்தான் அந்தச் சிறுவனும் தனது தாயைத் தேடி அன்னவாசல் நோக்கிப் புறப்படுகிறான். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். முதலில் முரண்படுகிறார்கள். பின்பு இணைகிறார்கள். இருவருக்குமே அவரவர் தாயைச் சந்திக்கும் ஆவல்.. சிறுவனுக்கோ தனது தாயைச் சந்தித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை. இதனாலேயே யாரிடமும் முத்தம் பெறாமல் தவிர்த்து வருகிறான். இந்தப் பயணத்தில் பலதரப்பட்ட மனிதர்கள், பிரச்சினைகள், எதிர்ப்புகள்.. என்று பலவற்றையும் சந்திக்கிறார்கள். அந்தச் சூழலுடன் கதையை நகர்த்தி, இறுதியில் சிறுவன் தாயை சந்தித்தானா? மனநலம் பாதித்தவனும் தனது அம்மாவைப் பார்த்தானா? என்பது நெகிழ வைக்கும் இறுதிக்காட்சி.
அதே நாள்தான் அந்தச் சிறுவனும் தனது தாயைத் தேடி அன்னவாசல் நோக்கிப் புறப்படுகிறான். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். முதலில் முரண்படுகிறார்கள். பின்பு இணைகிறார்கள். இருவருக்குமே அவரவர் தாயைச் சந்திக்கும் ஆவல்.. சிறுவனுக்கோ தனது தாயைச் சந்தித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை. இதனாலேயே யாரிடமும் முத்தம் பெறாமல் தவிர்த்து வருகிறான். இந்தப் பயணத்தில் பலதரப்பட்ட மனிதர்கள், பிரச்சினைகள், எதிர்ப்புகள்.. என்று பலவற்றையும் சந்திக்கிறார்கள். அந்தச் சூழலுடன் கதையை நகர்த்தி, இறுதியில் சிறுவன் தாயை சந்தித்தானா? மனநலம் பாதித்தவனும் தனது அம்மாவைப் பார்த்தானா? என்பது நெகிழ வைக்கும் இறுதிக்காட்சி.
நடிப்பு, இயக்கம் என படம் முழுவதும் 'மிஷ்கின்' முத்திரை பதித்திருக்கிறார். மிஷ்கின் நடிப்பதாகவேத் தோன்றவில்லை, உண்மையான மன நோயாளியை நம் கண்முன் நிறுத்துகிறார். குழந்தைத்தனத்துடன் இருப்பது, பேசுவது, அஸ்வத்தை பின்பற்றுவது, துணையாக நிற்பது, தனது 'பேண்டை' தூக்கிக்கொண்டு நடை போடுவது என ஒவ்வொரு காட்சியிலும் கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி, நம் மனதில் பதிகிறார்.
லாரியின் ஹாரனைத் திருடியதால் லாரிக்காரன் மிஷ்கினை போட்டு புரட்டியெடுக்கும்போது மனம் பிறழ்ந்தவன் மிஷ்கின் என்பதை உணர்ந்த நொடியில் லாரிக்காரன் ஸ்தம்பித்துப் போகும் காட்சி.! ஸ்னிக்தாவின் கதையைக் கேட்டு நால்வரும் திறந்த வாய் மூடாமல் திகைப்புடன் இருக்கும் காட்சி.. சிறுவனின் அம்மா எங்கே என்று கேட்டவுடன் 'வரேன்டி சிறுக்கி முண்டை..' என்று திட்டியபடியே தனது அம்மாவைத் தேடி வெக்கு, வெக்கென்று நடக்கும் காட்சி என்று இந்தப் படத்தில் இன்னும் சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு கேமிரா மூலமும் நம் மனதைக் கொள்ளை கொண்டிருக்கிறார் மிஷ்கின்.
தனது அம்மாவைப் பார்த்தவுடன் கதறி அழும் காட்சியும் அந்தப் பாடல் காட்சியுடன் தாயை மனநலம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கிளம்பும்போது காட்டுகின்ற வெறி.. போகாதே என்பதைப் போல் அப்போது மட்டும் ஆக்ஷனைக் காட்டும் அம்மா ரோஹினி.. என்று எங்குமே ஓவர் ஆக்ட் இல்லை.. அத்தனையும் ஒருவித சுய கட்டுப்பாட்டுக்குள்தான் கொண்டுப் போயிருக்கிறார்..!
இறுதிக் காட்சியில் பையனிடம் இதற்கு மேலும் பொய் சொல்ல முடியாமல் அவன் அம்மாவைப் பற்றிச் சொல்ல அவன் பதிலுக்கு 'மென்ட்டல்' என்று சொல்லிவிட.. மிஷ்கின் கோபத்தில் துடிக்கும்போது பையன் சொல்கின்ற பதில் அட்டகாசம்..
"எனக்கும் இப்படித்தான இருந்திருக்கும்.. இதோ இவங்களைச் சொல்லலாம்ல.. இவங்கதான் அம்மான்னு சொல்லிருக்கலாம்ல.. நான் முத்தமாவது கொடுத்திருப்பேன்ல.." என்று சொல்லும்போது அந்தப் பையனை வாரியணைக்க வேண்டும்போல இருக்கிறது..! தாயின் ஒரு முத்தத்திற்காக இத்தனை அல்லல்பட்டு, துன்பத்தில் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு வேறென்ன செய்ய முடியும்..!
அஸ்வத் ராம் தமிழ் சினிமாவின் தர்ஷில் சஃபாரி (தாரே ஜமீன் பரில் மனதைக் கவர்ந்த துள்ளல் சிறுவன்), அவரது புத்திசாலித்தனமும், அழகானத் தோற்றமும் நம்மை கவர்கிறது. 'தாயை எண்ணி ஏங்கும் நேரங்களில், அஸ்வத்தை தாங்களே எடுத்து வளர்க்க வேண்டும்' என படம் பார்க்கும் பெண்களுக்கு நிச்சயம் தோன்றும்.
விபச்சாரப் பெண்ணாக கடைசிப் பகுதியில் வரும் 'ஸ்னிக்தா'விற்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் படத்தை மகிழ்ச்சியாக முடிக்க அவர் தேவைப்படுகிறார். பனிரெண்டு நொடிகளே வருகின்ற போதிலும் நாசர், ரசிகர்களின் கைத்தட்டலைப் பெறுகிறார்.
படம் இறுதிவரையிலும் மெல்லிய சோகத்துடன்தான் இழையாடுகிறது.. இதற்குப் பக்க பலம் இசைஞானி இளையராஜா.. இங்கே ஒரு இசை ராஜ்ஜியத்தையே செய்துக் காட்டியிருக்கிறார்.
மிஷ்கினின் அறிமுகக் காட்சியில் துவங்கும் இளையராஜாவின் பின்னணி இசை, படத்தின் இறுதிவரையில் அவரும் ஒரு கேரக்டர் என்பதைப் போல் தனது சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். இனி பின்னணி இசையின் உதாரணத்துக்கு இந்தப் படத்தை நிச்சயமாக, தைரியமாகக் குறிப்பிட்டுப் பேசலாம். ராஜா ராஜாதான்..! அடுத்த வருட தேசிய விருது ராஜாவுக்கு நிச்சயம்..!
அடுத்து ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. ஒரே இடத்தில் கேமராவை நிறுத்தி வைத்து கேரக்டர்களை நகரவிட்டு எடுத்ததும், கேரக்டரும், கேமராவும் அசையாமல் ஸ்டில் போட்டோவைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும், கேரக்டர்கள் நகரும்போது அவர்கள் முன்னும், பின்னும், டாப், மட்டும் லோ வைட் ஆங்கிளிலும் நம்மை கதையோடும், கேரக்டர்களோடும் ஒன்றச்செய்வதும் மகேஷ் முத்துசாமி அவர்களைத் தோளில் தூக்கி வைத்துப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றுகிறது. அதேபோல் டிராட்ஸ்கி மருதுவின் கண்களை ஏமாற்றும் கலைவடிவம், தேர்ந்த எடிட்டிங் என எங்கும் குறை சொல்ல முடியாத உழைப்பு.
குறைகளே இல்லையா என்று கேட்பவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது. ஓரிரு காட்சிகள், முக்கியமாய் ஷாட் ப்யூட்டிக்காகவே ரொம்ப நேரம் நின்றுக் கொண்டேயிருப்பது, நீளமான ஸ்டாண்ட் ஸ்டில் காட்சிகள். அது உணர்த்தும் விஷயங்கள் நிறைய. சில அழுகைக் காட்சிகள், க்ளைமாக்ஸ் முடிந்து வரும் காட்சி போன்றவைகளை சொல்லலாம்.
'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' படங்களில் ரசிகர்களைக் கவருகின்ற விதத்தில் அவர்களுக்குப் பிடித்தமான காதல் சப்ஜெக்ட்டையும் தொட்டு அதை வைத்துத்தான் தனது இயக்கத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் மிஷ்கின். இது முன் வரிசை டிக்கெட்டுகளையும் கவர்ந்தது..! அதனால்தான் அந்த இரண்டுப் படங்களும் பி மற்றும் சி சென்டரில்கூட ஓடின..
ஆனால் இந்தப் படத்தில் எந்தவித சமரசத்தையும் வைத்துக் கொள்ளாமல் பாடல் காட்சிகளைக்கூட கதையை நகர்த்துமிடத்தில் மட்டுமே வைத்திருந்து தனக்குப் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆக, மிஷ்கின் சமீபத்தில் சொன்னதுபோல அவருடைய கேரியரில் இதுதான் முதல் படம் என்றே சொல்லலாம்..!
நந்தலாலா - தாலாட்டு



